வேதாரண்யத்தில் கோடை மழையால் உப்பு தட்டுப்பாடு

ஆண்டு உற்பத்தி இலக்கை எட்ட முடியாது என உற்பத்தியாளர்கள் கவலை;

Update: 2025-03-20 10:18 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேதாரண்யத்தில் கடந்த வாரம் பெய்த திடீர் கோடை கனமழையால், உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி, உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது சீரமைத்து உப்பு எடுக்க தொடங்கி உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய உப்பு உற்பத்தி, 3 முறை பெய்த மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உப்பு உற்பத்தியாளர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்று மாதத்தில், சுமார் ஒன்றை லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்து இருக்க வேண்டும். ஆனால், 10 ஆயிரம் டன் உப்பு கூட இன்னும் உற்பத்தி செய்ய முடியவில்லை. மேலும், கடந்த மாதம் ஒரு டன் உப்பு ரூ.1,500- க்கு விற்பனை செய்த நிலையில், தற்போது, உப்பு ஒரு டன் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. விலை உயர்ந்தாலும், வேதாரண்யத்தில் விற்பனை செய்ய உப்பு இல்லாததால், உற்பத்தியாளர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தற்போது, உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் மழை பெய்தால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு இலக்கை எட்ட முடியாமல் போவதுடன், கடும் உப்பு தட்டுப்பாடு ஏற்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Similar News