குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் 18 அடி உயரம் உள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை உள்ளது. பக்தர்கள் நினைத்த காரியத்தை நடத்திக் கொடுக்கும் வல்லவராக திகழ்வதால் இந்த ஆஞ்சநேயர் தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபடுகின்றனர். ஆஞ்சநேயருக்கு மாதம் தோறும் மூல நட்சத்திரத்தை அன்று ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் நேற்று மூலம் நட்சத்திரத்தை ஒட்டி ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி சார்த்தப்பட்டது. பக்தர்கள் வெற்றிலை மாலை, துளசி மாலை, அரளி மாலை, வெண்ணெய், வடை மாலை சார்த்தி தங்கள் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகமும் பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.