குமரி மாவட்டம் செண்பகராமன் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் வசிப்பவர் சதீஷ்குமார் (43). இவர் தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இவாஞ்சலின் ஆரல்வாய்மொழி தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் வாரம் ஒரு முறை வீட்டுக்கு வந்துவிட்டு திங்கள் கிழமை பணிக்கு செல்வது வழக்கம். இதனால் இவாஞ்சலின் ஆரல்வாய்மொழியில் உள்ள தனது தந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் இவாஞ்சலின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, சமையலறை மற்றும் படுக்கை அறையில் இருந்து அனைத்து பொருட்களையும் திருடியுள்ளனர். பீரோவை உடைத்து தங்க நகைகள் மோதிரங்கள் மற்றும் துணிமணிகளை திருடி சென்றதும் தெரிய வந்தது. இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் இவாஞ்சலின் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் சென்று விசாரணை நடத்தினர். வீட்டின் பின்புற பகுதியில் ஒரே ஒரு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழில் நிறுவனம் மட்டுமே உள்ளது. அந்த வழியாக கொள்ளையடித்து சென்று இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனவே தொழில் நிறுவன கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.