சேலம் கோட்டை மைதானத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
ஏராளமானோர் கலந்து கொண்டனர்;
சேலம் மாவட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சங்க ஒருங்கிணைப்பாளர்கள் திருவேரங்கன், கோவிந்தன், திருமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் தியோடர் ராபின்சன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி சங்க மாநில தலைவர் வரதன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டு உள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்க வேண்டும். இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வெளியிடப்பட்டு உள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட சம்பளம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். இது குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் தியோடர் ராபின்சன் கூறும் போது கோரிக்கை நிறைவேற்ற வில்லை என்றால் வருகிற 30-ந்தேதி மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் நடத்தி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். முடிவில் தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பர் சங்க மாநில தலைவர் செல்வராணி நன்றி கூறினார்.