குமிட்டிபதி: சிறுத்தை அட்டகாசம் - கால்நடைகள் பலி !

கோவை, எட்டிமடை மற்றும் குமிட்டிபதி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.;

Update: 2025-03-25 01:58 GMT
கோவை, எட்டிமடை மற்றும் குமிட்டிபதி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஜனவரி 31, 2025 அன்று, எட்டிமடை பகுதியில் கருப்பசாமி கவுண்டர் என்பவரின் தோட்டத்தில் மூன்று ஆட்டுக்குட்டிகள் சிறுத்தையால் கடித்துக் குதறப்பட்டன. தொடர்ந்து, மார்ச் 19, 2025 அன்று, குமிட்டிபதி பகுதியில் பழனிச்சாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த நான்கு வயது ஆடு சிறுத்தையின் தாக்குதலுக்கு இரையானது. மார்ச் 21, 2025 அன்று, அதே பகுதியில் சக்திவேல் என்பவரின் தோட்டத்தில் மூன்று மாத நாய்க்குட்டி சிறுத்தையால் கொல்லப்பட்டது. மார்ச் 23, 2025 அன்று, செந்தில் என்பவரின் தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த எட்டு மாத ஆட்டை சிறுத்தை இழுத்துச் சென்றது. மேலும், மார்ச் 22, 2025 அன்று, குமிட்டிபதி பகுதியில் கிருஷ்ணசாமி என்பவரின் தோட்டத்தில் இருந்த 8 வயது ஆண் நாய் காணாமல் போன நிலையில், நேற்று கோபி சௌந்தர் என்பவரின் தோட்டத்தில் சிறுத்தையால் கடித்துக் குதறப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ச்சியாக சிறுத்தையின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். அப்பகுதியில் வனத்துறையினரும் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் அதில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.

Similar News