மல்லூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

இது தொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை;

Update: 2025-03-25 04:54 GMT
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் சின்மயா நகரை சேர்ந்தவர் கோபி (வயது 24), தொழிலாளி. இதேபோல் நாழிக்கல்பட்டி கிராமம் சூராளிச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி கவுசிகா (18). இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 1½ வயதில் தீபக் என்ற ஆண் குழந்தை உள்ளது. கோபிக்கு நீண்ட நாட்களாக மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு கோபி வழக்கம் போல் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு கோபி தூங்க சென்று விட்டார். நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவர் எழுந்து பார்த்தபோது கவுசிகா தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அவரது அழுகை சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மல்லூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவுசிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கவுசிகாவிற்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் நடந்த இந்த தற்கொலை சம்பவம் குறித்து சேலம் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News