கோவை: ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு !
அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அழைப்பு.;

கோவை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலர் கர்னல் அன்சூல் வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ராணுவத்தில் பொது பணியாளர், தொழில்நுட்பம், எழுத்தர், கிடங்கு மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளார். கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம். இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொழிலாளி பிரிவிற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விருப்பம் உள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேசிய மாணவர் படை மற்றும் ஐ.டி.ஐ. டிப்ளமோ முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும். இதற்கான நுழைவுத் தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். முதலில் ஆன்லைன் பொதுத் தேர்வு நடத்தப்படும். பின்னர் ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்படும். இதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.