கல்லறை மீது அமர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சிறுநாயக்கன்பட்டியில் பொது மயானத்தை ஆக்ரமிப்பு செய்ய வந்த நபர்களை கண்டித்து கல்லறை மீது அமர்ந்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்;

திண்டுக்கல் கிழக்கு வட்டம் அ.வெள்ளோடு கிராமம் சிறுநாயக்கன்பட்டி ஊர் மக்களுக்கு சொந்தமான கல்லறை நிலம் உள்ளது. இதனை சுற்றுவட்டாரா பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்த இடத்துக்குரிய பட்டா மற்றும் ஆவணங்களை பொதுமக்கள் வைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த இடத்தை தற்போது அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியாக பத்திரம் தயாரித்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்த பொதுமக்கள் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் இன்று போலி பத்திரம் தயாரித்த நபர்கள் ஜேசிபி மூலம் மயானத்தை அகற்றுவதற்கு வருவதாக ஊர் பொதுமக்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மயானத்திற்கு வந்தனர். பொதுமக்களைக் கண்டவுடன் ஆக்கிரமிப்பு நபர்கள் ஓடி விட்டதாக தெரிய வருகிறது. இதனைத் தொடர்ந்து கல்லறையில் உட்கார்ந்து ஆண்கள் பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லறை மீது அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்பாத்துறை காவல் நிலைய போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து வைத்தனர்.