கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் கனகராஜ், லாரன்ஸ், சிவக்குமார், இளம்வழுதி, ஜான்பீட்டர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் பெருமாள், தலைவர் ஏழுமலை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி, மாவட்ட செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ஞானபிரகாஷ் ஆகியோர் பேசினர். இதில் தமிழ்நாடு அரசின் கோழி வளர்ச்சி கழகம் மூலம் விவசாயிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்க வேண்டும்; ஆண்டுதோறும் முத்தரப்பு கூட்டத்தை நடத்தி, வளர்ப்பு கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும்; கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்; கோழி பண்ணை மற்றும் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.