கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்களினால் சில இடங்களில் தகராறு, பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துதல் போன்ற பிரச்னைகளில் ஈடுபடுகின்றனர்.சில நேரங்களில் மது போதை ஆசாமிகளுக்கு இடையே ஏற்படும் மோதல், ஊர் பிரச்னையாகவும் மாறி கிராம மக்களிடையே மோதல்கள் ஏற்படவும் காரணமாக அமைகிறது. இதனைத் தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை மூலம் உத்தரவிடப்பட்டு பொது இடங்களில் மது அருந்துவோர் மீது போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. போலீசார் நாள்தோறும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் வழக்கு பதிவு செய்து எச்சரிக்கை விடுக்கின்றனர்.மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியது தொடர்பாக இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு காவல் நிலையங்களில் பொது இடத்தில் மது அருந்தும் நபர்கள் மீது நாள்தோறும் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகள் அருகே மற்றும் ஆங்காங்கே பொது இடங்களில் மது அருந்துவது தொடர்பாக போலீசார் சோதனை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து எச்சரித்து வருகின்றனர். இதில் 19 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மீது பெரும்பாலான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.