வாழ்மங்கலம் மழை மாரியம்மன் கோவில் ஆண்டு விழா

திரளான பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன்;

Update: 2025-04-01 12:14 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, பந்தகால் முகூர்த்தம், கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தீமிதி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ குண்டத்தில் இறங்கி, தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பின்னர், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் அழகர் (எ) செளரிராஜன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Similar News