சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் : வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டம் எதிரொலியாக தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;
தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டம் எதிரொலியாக தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி டவுன் ஏஎஸ்பி மதனை கண்டித்தும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் இன்று 3வது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதில் 272 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 782 வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், வழக்கறிஞர் சங்க தலைவர் தனசேகர் டேவிட், செயலாளர் செல்வின் மற்றும் நிர்வாகிகளுடன்பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் ஆயுதப்படைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். ஏஎஸ்பி மதன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று எஸ்பி உறுதிமொழி அளித்தார். இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். மேலும் நாளை 5ம் தேதி முதல் வழக்கம் போல் நீதிமன்ற பணிக்கு வழக்கறிஞர்கள் செல்வார்கள் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் தனசேகர் டேவிட் தெரிவித்தார்.