பண்ணைகள் அமைத்திட மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகள், பன்றிப்பண்ணைகள் அமைத்திட மானியம் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்;

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையினை உயர்த்திடவும், தொழில் முனைவோர்களை உருவாக்கிடவும், அரசு நிதியுதவி வழங்கி தொழில்முனைவோர்களை ஊக்குவித்து வருகிறது. அதன்படி, புதிய கோழிப்பண்ணைகள், செம்மறியாடு மற்றும் வெள்ளாட்டு பண்ணைகள், பன்றிப் பண்ணைகளை உருவாக்குவதன் மூலம் மாவட்டம் மற்றும் மாநிலத்தின் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை அதிகரிப்பதுடன், புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் https://nlm.udyamimitra.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களையும், விண்ணப்பிக்கத் தேவையான விரிவான திட்ட அறிக்கையினையும், விண்ணப்பதாரர்கள் http://www.tnlda.tn.gov.in/ என்ற இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்கள் அறிய அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு கால்நடை மேம்பாட்டு முகமை, சென்னை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.