வேகமாக சென்ற கார் விபத்து
கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே இன்று மதியம் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணாடி கடை மீது மோதியது;

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள காடச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆதித்யா என்பவர் தனது காரில் ஈரோட்டில் உள்ள கோவில் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று மதியம் திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது கருங்கல்பாளையம் காவிரி ஆற்றின் பாலம் வழியாக கார் சென்றபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அங்கு சாலையோரம் குமார் என்பவர் வைத்திருந்த தள்ளுவண்டி கடையின் மீது மோதியது. இதில் தள்ளுவண்டி மற்றும் கடையில் இருந்த கண் கண்ணாடி, தலைக்கவசம் உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஆதித்யா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். கார் தாறுமாறாக ஓடி வருவதை முன்பே பார்த்து சுதாரித்த கடையின் உரிமையாளர் விலகிக் கொண்டதால் அவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்து சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் கருங்கல்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தை இணைக்கும் காவிரி ஆற்றின் பாலம் அருகே இந்த விபத்து நடைபெற்றதால் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்ததால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.