திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திரம் திருவிழா
தரங்கம்பாடி அருகே புகழ்பெற்ற திருவிடைக்கழி சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம். இரண்டு சிறுமிகள் முருகன் பக்தி பாடல்கள் பாடி பரவசம்:-;
. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழி கிராமத்தில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த கோவில், சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யா சுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம் என்று தலபுராணம் கூறுகின்றது. பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த கோவில், முருகனுக்கு உரிய பாவம் கழிந்ததால், திருவிடைக்கழி என்று அழைக்கப்படுகிறது தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றான இந்த கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு பால், தேன், சந்தனம், விபூதி, பன்னீர் பல்வேறு வாசனை திரவியங்கள், கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இரண்டு சிறுமிகள் முருகன் பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடி வணங்கினர். இதில் மயிலாடுதுறை, சுவாமிமலை, சிக்கல், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தும் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.