கோவை: போதையில் பேருந்து ஓட்டிய அரசுப் பேருந்து ஓட்டுநர்!
கோவையிலிருந்து சிவகாசிக்கு சுமார் 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை போதையில் ஓட்டிய ஓட்டுநர் அருள்மூர்த்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.;
கோவையிலிருந்து நேற்று சிவகாசிக்கு சுமார் 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை போதையில் ஓட்டிய ஓட்டுநர் அருள்மூர்த்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஓட்டுநர் அருள்மூர்த்தி, திடீரென வேகத்தை அதிகரிப்பது, ஆள் இல்லாத சாலையில் தொடர்ந்து ஒலி எழுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டார். இதனால் சந்தேகமடைந்த பயணிகள் அவரை கவனிக்கத் தொடங்கினர். அப்போது அவர், காலின் மேல் கால் போட்டு ஆட்டோ ஓட்டுவது போல் பேருந்தை ஓட்டியதுடன், தடை செய்யப்பட்ட ஹான்ஸை எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டே போதையில் பேருந்தை இயக்கியுள்ளார். இதனால் அச்சமடைந்த பயணிகள் பேருந்தை நிறுத்தும்படி கூறியும் அவர் கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் சாலையோரம் பேருந்தை நிறுத்திவிட்டு ஓட்டுநர் இருக்கையிலேயே தூங்க ஆரம்பித்துள்ளார். இந்தச் சம்பவம் கோவை போக்குவரத்துக் கழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள், குடிபோதையில் பேருந்தை ஓட்டிய அருள்மூர்த்தி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.