கோவில்பாளையத்தில் ரவுடி போலீசாரை துப்பாக்கியால் மிரட்ட முயன்றதால் பரபரப்பு !
கோவில்பாளையத்தில் ரவுடி போலீசாரை துப்பாக்கியால் மிரட்ட முயன்றதால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வாலிபரைப் பிடித்தனர்.;
கோவை, கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹரிஸ்ரீக்கும், சக்திவேல் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பரபரப்பான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆத்திரமடைந்த ஹரிஸ்ரீ, சட்டவிரோதமாக வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து சக்திவேலை நோக்கி சுட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து சக்திவேல் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் ஹரிஸ்ரீயிடம் விசாரணை நடத்துவதற்காக அவரது இருப்பிடத்திற்கு சென்றனர். அப்போது, ஹரிஸ்ரீ அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும், மேலும் தனது துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்காப்புக்காக போலீசார் ஹரிஸ்ரீ மீது நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் சூலூர் அடுத்த அரசூர் பகுதியில் நிகழ்ந்ததால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரவுடி ஹரிஸ்ரீ உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) கார்த்திகேயன் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.