சேற்றில் சிக்கிய நகர் பேருந்து
மதுரை திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையத்தில் சேற்றில் சிக்கிய பேருந்தால் மக்கள் அவதியடைந்தனர்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி பேருந்து நிலையம் தற்போது பராமரிப்பு காரணங்களுக்காக மூடப்பட்டு தற்காலிகமாக தெற்கு தெருவில் உள்ள தனியார் காலி இடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படாத நிலையில் இந்த இடத்தில் பேருந்துகளை நிறுத்துவதற்கு போதிய முன்னேற்பாடுகளும் இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் (மே.15) இரவு திருமங்கலத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பேருந்து நிலையம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியது. நேற்று பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்துகள் மற்றும் பயணிகள் அனைவரும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் எஸ்.வெள்ளாகுளம் செல்லும் பேருந்து சேற்றில் மாட்டிக் கொண்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் ஊழியர்கள் மீட்டனர். எனவே உரிய ஏற்பாடுகளையும் நகராட்சி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.