தண்ணீர் லாரி மீது பேருந்து மோதி விபத்து டிரைவர் உயிரிழப்பு
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை;
புதுச்சேரியில் இருந்து 38 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று மதியம் 1:00 மணிக்கு, தமிழக அரசு விரைவு பஸ் சென்னைக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மாரிமுத்து, 45; ஓட்டிச் சென்றார்.புதுச்சேரி-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஓமந்துார் அருகே பஸ் சென்றபோது, டோல்கேட் ஒப்பந்த தொழிலாளர்கள் சென்டர் மீடியனில் நின்று கொண்டு, டேங்கர் லாரியின் மூலம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தனர். அப்போது, அரசு பஸ் எதிர்பாராத விதமாக டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில், பஸ்சின் முன்பக்கம் உருகுலைந்ததோடு, பஸ் டிரைவர் மாரிமுத்து, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பஸ்சில் பயணித்த ராமநாதபுரத்தை சேர்ந்த பஸ் கண்டக்டர் சேகர், 50; உட்பட 17 பேர் காயமடைந்தனர்.தகவலறிந்த கிளியனுார் போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், இறந்த டிரைவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியவர்கள் சாலையில் நிற்காமல் சென்டர் மீடியனில் நின்றதால் உயிர் தப்பினர். விபத்தில் சிக்கிய பஸ், ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது.விபத்து குறித்து கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.