காவாந்தண்டலத்தில் தார்ப்பாய் மூடாமல் செல்லும் மண் லாரிகள்
காவாந்தண்டலம் ஏரியில் இருந்து மண் ஏற்றிச் செல்லும் லாரிகளில் அளவாக மண் ஏற்றுவதோடு முறையாக தார்ப்பாய் போர்த்தி செல்ல வேண்டும் என,கோரிக்கை;
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த காவாந்தண்டலம் கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில் அரசு அனுமதியோடு, சில நாட்களாக மண் குவாரி இயங்குகிறது. ஏரியில் குத்தகை விடப்பட்ட மண்ணை, செங்கல் சூளை மற்றும் சாலை பணி போன்ற பயன்பாட்டுக்கு லாரிகள் வாயிலாக ஏற்றிச் செல்லப்படுகின்றன. காவாந்தண்டலம் ஏரியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து லோடு ஏற்றிச் செல்லும் லாரிகளில் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றுகின்றனர். இந்த லாரிகளில் பெரும்பாலானவை தார்ப்பாய் போர்த்தாமல் இயங்குகிறது. இதனால், லாரிகள் செல்லும் சாலைகளில் மண் கீழே கொட்டி சாலைகளில் மண் புழுதி பரவி வாகன ஓட்டிகள் அவதிபடுகின்றனர். குறிப்பாக காவாந்தண்டலம், வள்ளிமேடு, அவளூர் போன்ற கிராம சாலைகளிலும், வாலாஜாபாத் பிரதான சாலை பகுதிகளிலும் இத்தகைய பாதிப்புகள் அதிகள் உள்ளன. எனவே, காவாந்தண்டலம் ஏரியில் இருந்து மண் ஏற்றிச் செல்லும் லாரிகளில் அளவாக மண் ஏற்றுவதோடு முறையாக தார்ப்பாய் போர்த்தி செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.