திருமருகல் ஒன்றியத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியதால்
முறை வைக்காமல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை;
காவிரி டெல்டா பகுதிகளில், ஆண்டுதோறும் ஜூன் மாதம் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கும். வருகிற ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை வழக்கமாக திறக்கப்படுவதை முன்னிட்டு, குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்குவர். அதே போல், இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன், ஆழ்குழாய் நீர்ப்பாசன வசதியுள்ள விவசாயிகள் சற்று முன்கூட்டியே குறுவை சாகுபடி பணிகளை தொடங்குவது வழக்கம். இதனை முன்பட்ட குறுவை சாகுபடி பணி என விவசாயிகள் அழைப்பர். அதன்படி, திருமருகல் ஒன்றியத்தில் அம்பல், பொறக்குடி, கணபதிபுரம், சேஷமூலை, ஆலத்தூர், போலகம், பண்டாரவாடை, திருப்புகலூர், புத்தகரம், மேலப்பூதனூர் உட்பட திருமருகல் சுற்றுவட்டார பகுதிகளில், 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கி செய்து வருகின்றனர். புத்தகரம், குருவாடி, திருப்புகலூர், போலகம், அண்ணாமண்டபம், மேலப்பூதனூர் உள்ளிட்ட சில இடங்களில் நாற்றங்கால்களில் விடப்பட்டிருந்த நெல் நாற்றுகளை பறித்து நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆழ்குழாய் பாசனத்தை வைத்து பணிகளை தொடங்கினாலும், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் அந்த நீரை கொண்டு தொடர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கி மும்முரமாக செய்து வருகின்றனர். நாற்று பறித்தல், நடவு நடுவதற்கு வயல்களை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளதால், மேட்டூர் அணை நீர் பாசனம் மூலம் முறை வைக்காமல் தண்ணீர் வழங்க வேண்டும். சாகுபடிக்குத் தேவையான உரம், பூச்சி மருந்து, நுண்ணுயிர் மருந்துகள் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.