இரண்டு முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்த்து பயனடையலாம் : ஆட்சியர்
அங்கன்வாடி மையம்;
இரண்டு முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சேர்த்து பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் பொருட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் 1,749 அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக்கல்வி போன்றவை வழங்கப்படுகின்றது. குறிப்பாக 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக்கல்வி உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல், மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மேலும், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளி செல்ல ஆயத்தப்படுத்தப் படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள் தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஜூன் 2025 ஆம் மாதத்தில் அங்கன்வாடி மையத்தில் தவறாது சேர்த்திடவும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால் அச்சேவையையும் பயன்படுத்தி கொள்ளுமாறும்" மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.