தஞ்சாவூர் அருகே வல்லம் தேசிய நெடுஞ்சாலையில் மணல் கடத்தி வந்த டாரஸ் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தஞ்சை பகுதியில் மணல் கடத்தப்படுவதாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை உதவி இயக்குனர் பிரியா வல்லம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் வல்லம் காவல்துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வல்லம் அருகே திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த டாரஸ் லாரியை தடுத்து நிறுத்தி, சோதனையிட்டதில் ஆறு யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வல்லம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டாரஸ் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக லால்குடி அன்பில், மங்கம்மாள்புரம் பகுதியை சேர்ந்த கோதண்டபாணி என்பவரின் மகன் மணிகண்டன் (42) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.