தஞ்சை அருகே மினி லாரியில் மணல் கடத்தி வந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை கூடலூர் வெண்ணாற்றங்கரை சுடுகாடு அருகே மணல் கடத்தல் நடந்து வருவதாக தஞ்சை தாலுகா காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் தாலுகா காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை மறித்தனர். காவல்துறையினரைக் கண்டதும் மினிலாரியில் வந்த 4 பேர் தப்பியோடினர். இதில் 2 பேர் சிக்கிக் கொண்டனர். பின்னர் மினி லாரியை சோதனை செய்த போது அனுமதியின்றி மணல் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிலாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்து தஞ்சையை அடுத்த கூடலூர் பகுதியை சேர்ந்த கோபிநாத் (39), செல்வராஜ் மகன் ராஜேஷ் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.