திமுக நிர்வாகி வீடு உட்பட இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

வத்தலக்குண்டு அருகே தகராறில் சமரசம் செய்த திமுக நிர்வாகி வீடு உட்பட இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு;

Update: 2025-06-09 08:00 GMT
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலகுண்டு கிராமத்தில் இரு சக்கர வாகனகள் மோதிக்கொண்ட போது ஏற்பட்ட தகராறு காரணமாக திமுக நிர்வாகி வீடு உட்பட இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வத்தலகுண்டு அருகே கன்னிமார் கோவில்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்கும் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட சம்பவத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக செல்லதுரை மற்றும் தினேஷ் தரப்பினர் இடையே பழைய வத்தலக்குண்டு கண்மாய் கரையில் கோஸ்டி மோதல் ஏற்பட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனிடையே நேற்று நள்ளிரவில் திமுக ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் காளவாசல் கண்ணன் வீட்டில் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. உறக்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்து வெளியே வந்து பார்த்தபோது இளைஞர் ஒருவர் அதே பகுதியில் மேலும் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த இளைஞரை சுற்றி வளைத்து பொதுமக்கள் பிடித்த போது அந்த இளைஞன் தன் கையில் வைத்திருந்த கத்தியால் தன்னைத்தானே வெட்டிக்கொண்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசார் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த மணி பாண்டி (26) என்பவரை கைது செய்தனர். மேலும் காயத்துடன் இருந்த மணி பாண்டியை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருசக்கர வாகன மோதல் தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் தனக்கு தனது உறவினருக்கு ஆதரவாக செயல்பட்ட மணிபாண்டி இந்தப் பிரச்சனையில் சமரச முயற்சி ஈடுபட்ட திமுக நிர்வாகி காளவாசல் கண்ணன் வீடு உட்பட பல இடங்களில் பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டு இருந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடங்களில் வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) விக்டோரியா நேரடியாக ஆய்வு செய்தார். பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காளவாசல் கண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News