தேசத் தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடைபெற உள்ளது
தேசத் தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி நடைபெற உள்ளது;
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இவ்வறிவிப்பிற்கிணங்க, 30.06.2025 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 01.07.2025 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் ஹாஜி பி.செய்யது முகமது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும் நடத்தப்பெறவுள்ளன. அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும். அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1.அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி 2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 3.அரசியலமைப்பின் தந்தை கல்லூரி மாணவர்களுக்கு 1.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் 2.அம்பேத்கர் எழுதிய நூல்கள், 3.அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி, 4.அம்பேத்கரும் பௌத்தமும் ஆகிய தலைப்புகளில் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன. முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், 2.திராவிடம், 3.நெஞ்சுக்கு நீதி. கல்லூரி மாணவர்களுக்கு 1.அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், 2.குறளோவியம், 3.கலைஞரின் எழுதுகோல் ஆகிய தலைப்புகளில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெறவுள்ளன. பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000-, இரண்டாம்பரிசு ரூ.3000-, மூன்றாம் பரிசு ரூ.2000- என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும், தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசாக ரூ.2000- என்ற வீதத்தில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.