பூதலூரில் குடிநீர் கேட்டு சிபிஎம் - பொதுமக்கள் சாலை மறியல்... குடிநீர் வழங்க அலுவலர்கள் உறுதி
சாலை மறியல் போராட்டம்;
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர், கோவில் பத்து ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களுக்கு கடந்த பத்து தினங்களாக தண்ணீர் வராமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதுகுறித்து, அரசு அலுவலர்களிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை காலை பூதலூர் நான்கு ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் சுமார் 1 மணி நேரம் நீடித்தது. தகவலறிந்த பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், சேக் தாவூத், மற்றும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் போராட்டம் நடந்த இடத்திற்கு நேரடியாக வருகை தந்து போராட்டக்காரர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கப்படும் என உத்தரவாதம் கொடுத்தனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.ஜி.சரவணன், பி.ராஜு, ஜி.கண்ணன், கெங்கை பாலு, ராமலிங்கம், கோவிந்தராஜ், மணிகண்டன், சோலை.தெட்சிணாமூர்த்தி, மதி, சுந்தரவடிவேல், புண்ணியமூர்த்தி மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.