திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
நேரு நகரில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.;
தருமபுரி மாவட்டம், சவுளுப்பட்டி அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள நேரு நகரில் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவானது கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிற்பகல் 3 மணி அளவில் மங்கல இசையுடன் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 6 மணி அளவில் மங்கல இசையுடன் கணபதி பூஜை, புண்யாஹ வாசனம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், பிரவேச பலி ஆகிய சிறப்பு பூஜைகள் நடைபெற்று இரவு 8 மணி அளவில் கும்ப அலங்காரம், கும்ப ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதற்கால ஹோமம், மூலமந்திர ஹோமம் பூஜைகளும் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 8.30 மணி வரை மங்கல இசையை தொடர்ந்து வேத பாராயணம், இரண்டாம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ மகா மாரியம்மன் ஸ்ரீ விஷ்ணு குருகை ஸ்ரீ நவகிரகம் ஸ்ரீ பால கணபதி ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ பிரம்மி ஸ்ரீ வைஷ்ணவி ஸ்ரீ துர்க்கை அம்மன் போதி ராஜா ஸ்ரீ நாகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்து பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று சாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இவ்விழாவிற்கு வரும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவினை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.