ஈரோடு ஜவுளி வார சந்தையில் மொத்தம் - சில்லறை விற்பனை மந்தம்
குறைந்த அளவே வியாபாரிகள் வந்ததால் ஈரோடு ஜவுளி வார சந்தையில் மொத்தம் - சில்லறை விற்பனை மந்தம்;
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளான மணிக்கூண்டு ரோடு, டி.வி.எஸ். வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், காமராஜர் வீதி, பிருந்தாவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வாரந்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளி வார சந்தை நடைபெற்று வருகிறது. இது தவிர, ஜவுளி குடோன்களிலும் ஜவுளி விற்பனை நடைபெறுவது வழக்கம். தென்னிந்திய அளவில் பிரசித்தி பெற்ற ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து, ஜவுளி கொள்முதல் செய்து செல்வார்கள். இந்த நிலையில், இந்த வார ஜவுளிச்சந்தை நேற்று இரவு தொடங்கி இன்று மாலை வரை நடைபெற்றது.இந்த வாரம் வெளி மாநில வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால்மொத்த வியாபாரம் மந்தமாக நடைபெற்றது. ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. கேரளாவிலிருந்து ஒரு சில வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர்.இதனால் மொத்த வியாபாரம் வெறும் 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றது.அதேபோல் எப்பவும் விறுவிறுப்பாக நடைபெறும் சில்லறை விற்பனையும் இந்த வாரம் மந்தமாக நடந்தது. உள்ளூரிலிருந்தும் குறைந்த அளவே வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இந்த வாரம் சில்லறை விற்பனை 10 சதவீதம் மட்டுமே நடைபெற்றதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.இது குறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-கடந்த சில வாரங்களாக ஈரோடு ஜவுளி வார சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் குறைந்த அளவே வருவதால் மொத்த வியாபாரம் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. அதே சமயம் உள்ளூர் வியாபாரிகள் அதிகளவில் வருவதால் சில்லறை விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்த வாரம் உள்ளூர் வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் சில்லறை விற்பனையும் மந்தமாக நடந்தது. தற்போது பள்ளிகள் திறந்ததாலும், எந்த சுப முகூர்த்தங்கள் இல்லாததால் வியாபாரம் மந்தமாக நடைபெறுகிறது. இன்னும் சில வாரங்கள் இதே நிலைமைதான் நீடிக்கும். ஆகஸ்ட் மாதம் பிறந்ததும் வியாபாரம் மீண்டும் சுடு பிடிக்க தொடங்கும் என நம்பிக்கை உடன் என்றனர்.