நெடுஞ்சாலையில் யானை கூட்டம்
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை குட்டிகளுடன் கடந்த யானை கூட்டம் வனத்துறையினர் எச்சரிக்கை;
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் உணவு தண்ணீர் தேடி சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலை வருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. ஆசனூர் வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு ஆசனூர் அருகே அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைக் கூட்டங்கள் குட்டிகளுடன் சத்தி - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன. யானை கூட்டமாக சாலையை கடக்கும் காட்சியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சற்று தொலைவிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டனர். சிலர் யானைகள் கடக்கும் காட்சியை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். கிட்டத்தட்ட 10 -க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் சாலையை கடந்து சிறிது நேரம் நெடுஞ்சாலை ஓரம் சுற்றி திரிந்து கொண்டிருந்தன. பின்னர் மீண்டும் அந்த யானை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து தொடங்கியது.யானைகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறது. யானைகள் கூட்டமாக செல்லும்போது வாகன ஓட்டிகள் சுற்றுலா பயணிகள் அவைகளுக்கு எந்த ஒரு தொந்தரவும் செய்யக்கூடாது. ஆசனூர் வழியாக யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் தங்களது வாகனத்தை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.