குமரி மாவட்டம் சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் (51)என்றவர் தங்கி இருந்து மீன் பிடி தொழில் செய்து வந்துள்ளார். நேற்று சூறைக்காற்று காரணமாக செல்வம் வேலைக்கு செல்லாமல் துறைமுகத்தில் இருந்துள்ளார். இரவு அவர் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகில் படுக்க சென்றுள்ளார். இன்று அதிகாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக விசைப்படகில் இருந்து சென்ற போது, எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். உடனடியாக மீனவர்கள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து மீனவர் செல்வம் கடலில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.