உங்களுடன் ஸ்டாலின் முகாம் அமைச்சர் பங்கேற்பு
ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்;
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காமராஜர் மார்க்கெட் பகுதியில் இன்று நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை கடலூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்தார்கள். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். தற்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விதிமுறைகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை பொதுமக்கள் அறிந்து, தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். ஒட்டன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் இரண்டாவது முகாம் இன்று நடத்தப்படுகிறது. 2 மற்றும் 3வது வார்டு பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார். இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, நகராட்சி ஆணையாளர் சுவேதா, வட்டாட்சியர் சஞ்சைகாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.