ஒட்டன்சத்திரம் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
ஒட்டன்சத்திரத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை உணவுத்துறை அமைச்சர் பெற்றுக்கொண்டார்;
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் கலந்துகொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பெரியகோட்டை ஊராட்சி, ஒண்டிபொம்மிநாயக்கனுாரில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டும் பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஆணையாளர் சுவேதா, வட்டாட்சியர் சஞ்சைகாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.