உங்களுடன் ஸ்டாலின் முகாமில், மனு கொடுத்த சிறிது நேரத்தில் நூறுநாள் வேலைத்திட்ட அட்டை வழங்கிய அமைச்சர். மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி

மாற்றுத்திறனாளி;

Update: 2025-08-20 16:37 GMT
பேராவூரணி அருகே நடைபெற்ற, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், மனு கொடுத்த சிறிது நேரத்திலேயே 100 நாள் வேலைத்திட்ட அட்டையை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாற்றுத்திறனாளி பெண்ணிடம் வழங்கினார்.  இதனால் மாற்றுத்திறனாளி நெகிழ்ச்சி அடைந்து அமைச்சரிடம் நன்றி தெரிவித்தார்.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ரெட்டவயல் கிராமத்தில் புதன்கிழமை அன்று உங்களுடன் ஸ்டாலின் முகம் நடைபெற்றது. அப்போது அருகில் உள்ள கொளக்குடி கிராமத்திற்கு ஒரு நிகழ்ச்சிக்காக அவ்வழியாகச் சென்ற, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் முன்னறிவிப்பின்றி உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்றார்.  இதையடுத்து அவரை அலுவலர்கள் மேடைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் குத்து விளக்கேற்றி முகாமை துவங்கி வைத்த அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், அரசுத் திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசினார்.  பின்னர் மேடையில் இருந்து இறங்கி, ஒவ்வொரு அரசுத்துறை ஸ்டால்களையும் சென்று பார்வையிட்டு, புறப்பட போகும் சமயம், அங்கு வந்த கொளக்குடி பகுதியைச் சேர்ந்த எம்.காம், எம்.பில் படித்த மாற்றுத்திறனாளியான தீபிகா என்பவர் தனக்கு 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.  இதையடுத்து, அலுவலர்களை அழைத்து பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியதோடு,அங்கேயே காத்திருந்தார். அரசு அலுவலர்களும் உடனடியாக 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டையை அமைச்சர் முன்பாகவே உடனடியாக 5 நிமிடத்தில் தயார் செய்தனர்.  பின்னர் மாற்றுத்திறனாளி பெண் தீபிகாவிடம் அடையாள அட்டையை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். இதனால் நெகிழ்ந்து போன மாற்றுத்திறனாளி பெண் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.  மேலும், முகாமில் வந்திருந்த இளம் பெண்கள் சிலர் போட்டிபோட்டு அமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அமைச்சரும் பொறுமையாக செல்பி எடுக்க ஒத்துழைத்தார்.  இந்நிகழ்வில், பேராவூரணி வட்டாட்சியர் நா.சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், மனோகரன், சேதுபாவாசத்திரம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வை.ரவிச்சந்திரன், திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் குழ.செ.அருள்நம்பி, அறந்தாங்கி முன்னாள் ஒன்றியப் பெருந்தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன்,, திமுக அறந்தாங்கி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எல்.குமார், மணக்காடு அருணாசலம் மண்கொண்டார், சிபிஎம் நிர்வாகி வீ.கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வீ.ஆர்.கே.செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Similar News