தஞ்சாவூரில், திருமுறைகளை தலையில் சுமந்து சிவனடியார்கள் வீதி உலா
வீதி உலா;
தஞ்சையில் நால்வர் திருமேனிகளுடன், பன்னிரு திருமுறைகளான தேவாரம், திருவாசகத்தை தலையில் சுமந்தபடி சிவனடியார்கள் வீதி உலா நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். சைவ சமயத்தின் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மற்றும் மாணிக்கவாசகர் ஆகிய நான்கு சமயக்குரவர்களை நால்வர் என அழைக்கப்படுவர். இவர்கள் திருமுறைகள் எனப்படும் பக்திப் பாடல்களை இயற்றி, சைவ சமயத்தைப் பரப்புவதிலும், சிவபெருமானின் பெருமைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதிலும் முக்கியப் பங்காற்றினர். தஞ்சையில் உள்ள அனைத்து சிவனடியார்கள் திருக்கூட்டம் மற்றும் பக்தர்கள் சார்பில் 2-ஆம் ஆண்டாக தஞ்சையில் நால்வர் வீதி உலா நடைபெற்றது. சைவ சமயத்தை வளர்த்த திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர் உருவத்திருமேனியுடன் பன்னிரு திருமுறைகளை சிவனடியார்கள் தலையில் சுமந்தபடி வீதி உலா நடைபெற்றது. கயிலாய வாத்திய இசை முழங்க உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் இந்த திருவீதி உலா நடைபெற்றது. தஞ்சையில் உள்ள வீதிகளில் வந்த வீதி உலாவினை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு தஞ்சையின் ராஜவீதிகளில் தேவாரம், திருவாசகத்தை தலையில் சுமந்தபடி வீதி உலா வந்தனர், இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.