விநாயகர் சிலைகளை கொலு வைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லும் பக்தர்கள்
குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகளின் விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.கொலு வைக்கும் இடத்திற்கு சிலைகளை பக்தர்கள் கொண்டு செல்கின்றனர்.;
விநாயகர் சதுர்த்தி விழா ஆக. 27ல் நடைபெறவுள்ளது. இந்நாளில் குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கொலு வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்து, 3,5,7 ஆகிய நாட்களுக்கு பிறகு, கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் விட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் கொலு வைப்பதற்காக, சிறிய அளவிலான சிலைகள் முதல் பெரிய அளவிலான சிலைகள் வரை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிலை வியாபாரி கார்த்தி கூறியதாவது: விநாயகர் சிலைகள் ஆண்டுதோறும் இறைவனுக்கு செய்யும் ஒரு சேவையாக எண்ணி குலாலர் ஆகிய எங்கள் குலத்தொழிலாக எங்கள் குடும்பத்தார் விற்பனை செய்து வருகிறோம். அரை அடி முதல் 10 அடி வரையிலும் சிலைகள் விற்பனை செய்து வருகிறோம். இந்த சிலைகள் அரசு விதிப்படி, நீரில் எளிதில் கரையும், பொருட்களால் இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. எந்த ரசாயன கலவையும் இதில் பயன்படுத்தப்படவில்லை. மாசுக்கட்டுப்பாடு துறையின் அறிவுரைப்படி, ஜிகினா வேலைபாடுகள் தவிர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். நேற்று பக்தர்கள் தங்கள் பகுதியில் விநாயகர் கொலு வைத்து கொண்டாட, விற்பனை செய்யும் இடத்திலிருந்து தங்கள் பகுதிகளுக்கு சரக்கு வாகனம் மூலம் மேளதாளங்களுடன் எடுத்து சென்றனர்.