தடுப்பணை அமைத்து தர தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை 

கோரிக்கை;

Update: 2025-08-24 15:02 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேராவூரணி ஒன்றியத் தலைவர் வீ.கருப்பையா, நிர்வாகிகள் பூவாணம் எழிலரசன், கஜேந்திரன், பாலகிருஷ்ணன், ருக்கூன் மற்றும் நிருவாகிகள் வருவாய் கோட்டாட்சியர் சங்கரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, கோட்டாகுடி அருகில், கார்காவயல் அக்னி ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், பாசனத்துக்காக தடுப்பணை அமைக்க வேண்டும். இரண்டாம்புளிக்காடு வங்கியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாலும், கட்டையங்காட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டி இருப்பதாலும், இடைப்பட்ட தூரத்தில் அரசுடைமை வங்கி ஒன்றை அமைக்க வேண்டும். பூவாணம் கிராமத்தில் வெளியூர் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்கும் அதே நேரத்தில், உள்ளூர் ஏழை மக்களுக்கும் அங்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். பூவாணம் பகுதி பட்டியலின மக்கள் பால் கூட்டுறவு சொசைட்டி கடன் கட்டிய பிறகும், புதிய கடன் வழங்கும் மறுக்கும் போக்கு நிலவுகிறது. எனவே, அந்த மக்களுக்கு கடன் வழங்க வேண்டும். ஏழுகாளியம்மன் கோவில் செல்லும் சாலையை அமைத்து தர வேண்டும். மணக்காடு கூத்தாண்டவர் குளத்திற்கு தண்ணீர் வழங்கும் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றி, சரி செய்து குளத்திற்கு நீர் நிரப்பித் தர வேண்டும். பெருமகளூர் பேரூராட்சி பகுதியில் 100 நாள் வேலைத்திட்டம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனை மீண்டும் தொடங்கி வேலை வழங்க வேண்டும். மரக்காவலசை பெரியகுளம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றி நீர்நிரப்பித் தர வேண்டும். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கழிவு நீர் வடிகால் வாய்க்காலை சரி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Similar News