தஞ்சை கீழவாசல் பகுதியில் 20 கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சை மாநகரில் வர்த்தக நிறுவனங்கள் அதிகம் நிறைந்த பகுதி கீழவாசல் ஆகும். இங்கு சரபோஜி மார்க்கெட், பாத்திரக்கடைகள், மளிகை கடைகள், அரிசி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் 24 மணி நேரமும் போக்குவரத்தும் அதிகமாக காணப்படும். இதில், கீழவாசல் சாலை மற்றும் ஆட்டுமந்தைத் தெரு, கொள்ளுப்பேட்டை தெரு செல்லும் சாலையில் உள்ள சில கடைகளின் முன்பு ஆக்கிரமிக்கப்பட்டு கொட்டகை மற்றும் சிமெண்டு தளம் அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் வாகனங்கள் செல்லும் போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் மாநகராட்சி அலுவலர்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மாநகராட்சி அலுவலர்கள் ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த கொட்டகைகளை அகற்றியதோடு, கடைகளின் முன்பு ஆக்கிரமித்து போடப்பட்டு இருந்த சிமெண்டு தளங்களையும் அப்புறப்படுத்தினர். 20-க்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்களில் இந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றதையடுத்து அந்த பகுதியில், பிரச்சனைகளை தவிர்க்கும் பொருட்டு காவல்துறையினர் பாதுகாப்பும் செய்யப்பட்டு இருந்தது.