தீபாவளி சிறுசேமிப்பு மோசடி: காவல் அலுவலகத்தில் பெண்கள் புகார்

புகார்;

Update: 2025-08-30 13:01 GMT
தீபாவளி சிறுசேமிப்பு திட்ட பண மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் வெள்ளிக்கிழமை புகார் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் உள்பட 15 பேர் வெள்ளிக்கிழமை அளித்த மனு: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி கலைஞர் நகர், புதுக்கோட்டை சாலை கற்பகம் நகரில் தனியார் நிறுவனத்தை நடத்தி வந்த தம்பதியினர் தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறுசேமிப்புத் திட்டம், தீபாவளி சிறுசேமிப்பு குலுக்கல் கூப்பன் திட்டம் நடத்துகிறோம் எனக் கூறி மாதந்தோறும் ரூ. 500, ரூ. 1,000 என வசூல் செய்தனர்.  இதில் ரூ.500 கொடுப்பவர்களுக்கு 12 மாதங்களில் ரூ. 7 ஆயிரத்து 500ம், ரூ. 1,000 கொடுப்பவர்களுக்கு ரூ. 15 ஆயிரமும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறினர். இதை நம்பி நாங்கள் 11 பேர் தீபாவளி சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்ந்து ரூ. 70 லட்சம் செலுத்தினோம். ஆகஸ்ட் மாதம் பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியதன் அடிப்படையில், நாங்கள் அவர்களது கைப்பேசிக்கு தொடர்பு கொள்ளும்போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.  இதேபோல, வீட்டுக்குச் சென்று தேடியபோது இருவரும் இல்லை. பின்னர், ஏற்கெனவே மோசடி வழக்கில் தம்பதியினர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.  இதேபோல, எங்களிடமும் தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பணத்தை பெற்று மோசடி செய்திருப்பதை அறிந்தோம். ஏழ்மை நிலையில் உள்ள நாங்கள் வாழ்வாதாரமின்றி கஷ்டமான நிலையில் உள்ளோம். எங்களைப் போன்று இன்னும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தொடர்புடைய தம்பதி மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Similar News