தஞ்சையில், முதலமைச்சர் கோப்பைக்கான பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.... டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
விளையாட்டு போட்டிகள்;
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 2025-26-ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது . இதில் பள்ளி அளவிலான விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த போட்டிகளை, தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் டேவிட் டேனியல் வரவேற்றார். இதில், பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து, ஹாக்கி, கைப்பந்து, வாலிபால், கேரம், நீச்சல், மேசைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டரங்கிலும், இறகுப்பந்து போட்டிகள் கமலா சுப்ரமணியம் மேல்நிலைப் பள்ளியிலும், கிரிக்கெட் மற்றும் சதுரங்கம் விளையாட்டுப் போட்டிகள் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியிலும் வெள்ளி நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றிப் பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3,000, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,000 என அவரவர் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் சர்வதேச தடகள விளையாட்டு வீராங்கனை ரோசி , மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அய்யாக்கண்ணு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கற்பகம், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சஞ்சய், மாநகராட்சி கவுன்சிலர் அண்ணா. பிரகாஷ், சம்போ ஹேண்ட் டு ஹேண்ட் மாநில மற்றும் தென்னிந்திய தலைவர் டாக்டர்.முகமது அனஸ் மற்றும் மாவட்ட பயிற்றுநர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பெற்றோர் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.