மின்னல் வேகத்தில் பறந்து சென்று மரத்தை உடைத்த கார். காயமின்றி இரு இளைஞர்கள் உயிர் தப்பிய அதிசயம்

குமாரபாளையம் அருகே டி சி நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் பறந்து சென்று மரத்தை உடைத்த கார். காயமின்றி இரு இளைஞர்கள் உயிர் தப்பிய அதிசயம்;

Update: 2025-09-06 15:50 GMT
குமாரபாளையம் அருகே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்னல் வேகத்தில் பறந்து சென்று மரத்தை உடைத்த காரில் பயணம் செய்த இரண்டு இளைஞர்களும் காயம் இன்றி உயிர் தப்பினர். விபத்து குறித்த சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது கேரள மாநிலம் கொச்சின் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் விஷாக், 24 மற்றும் எல்விஸ் டென்னி, 25 இருவரும் பெங்களூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சூழ்நிலையில், நேற்றுமுன்தினம் ஓணம் திருவிழா கேரள மாநிலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றதால், இரண்டு இளைஞர்களும் தனது காரில் இரண்டு நாட்களுக்கு முன்பு விடுமுறை எடுத்துக் கொண்டு ஓணம் திருவிழா கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்று இருந்தனர். பின்னர் பணிக்கு செல்வதற்காக மீண்டும் கொச்சினில் இருந்து பெங்களூருக்கு தங்களது கார் மூலம் திரும்பினர். இதில் காரினை விசாக் ஓட்ட, எல்விஸ் டென்னி அருகில் அமர்ந்து வந்தார். கார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை பகுதியான வட்டமலை என்னும் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது, கார் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பறந்து சென்றது. அப்பொழுது சாலையின் பக்கவாட்டில் இருந்த மரத்தை உடைத்து கீழே விழுந்து சுக்கு நூறாக உடைந்தது. அப்பொழுது நெடுஞ்சாலையின் ஓரமாக உள்ள வீட்டின் வாசலில் கூட்டிக் கொண்டிருந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்த நிலையில் காரில் பயணம் செய்த இரண்டு இளைஞர்களும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விபத்து குறித்த பதபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News