அமித் ஷா, நிர்மலா சீதாராமனுடன் பேசியது என்ன? - செங்கோட்டையன் விவரிப்பு
மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது பேசிய விவரங்கள் குறித்து செங்கோட்டையன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.;
டெல்லியில் இருந்து திரும்பிய பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், நேற்று ஹரித்வார் செல்வதாக சொல்லிவிட்டு சென்றேன். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அவர்களிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலுப்பெற வேண்டும் என்று கருத்துகளை அவர்களிடம் எடுத்துச் சொன்னோம். ஆகவே, இதன் அடிப்படையில் இதுகுறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உண்டு, இது வரவேற்கத்தக்கது. உள்துறை அமைச்சரை சந்தித்தபோது, அங்கே ரயில்வே அமைச்சர் வருகை தந்தார். அப்போது ஈரோட்டிலிருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், முதலில் 10 மணிக்கு புறப்பட்டது. இப்போது முன்கூட்டியே புறப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக சொன்னேன். அதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். மக்கள் பணி செய்வதற்கும், இயக்கம் வலுப்பெறுவதற்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று செங்கோட்டையன் கூறினார்.