வெள்ளகோவில் அருகே காளை சிலைக்கு பொங்கல் வைத்து வழிபாடு

வெள்ளகோவில் அருகே காளை சிலைக்கு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வைத்து வழிபாடு. காளையின் நினைவிட கட்டுமானப் பணி முழுமையாக முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது;

Update: 2025-09-11 04:16 GMT
வெள்ளகோவில் அருகே உள்ள சேனாபதிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவர், 10 மாதமே ஆன ஒரு காளை கன்றுக்குட்டி வாங்கி அதற்கு கருப்பன் என்ற பெயர் சூட்டி வளர்த்தார். 18 ஆண்டுகளாக இவருடன் குடும்பத்தில் ஒருவர் போல இருந்தது. பிறகு வயது முதிர்வு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி இறந்துவிட்டது. இதையடுத்து அந்த காளையின் உடலை தனது தோட்டத்திலேயே அடக்கம் செய்தார். அந்த இடத்தில் காளையின் சிலையை வைத்துள்ளார். அங்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10-ந்தேதி குடும்பத்தோடு சேர்ந்து அவர் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கி வருகிறார். அதன்படி நேற்று காளையின் சிலை அருகே பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்து அனைவருக்கும் சோமசுந்தரம் அன்னதானம் வழங்கினார். தற்போது காளை மாட்டுக்கு நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. விரைவில் காளையின் நினைவிட கட்டுமான பணி முழுமையாக முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Similar News