மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாமல்லன் நகர் மக்கள் கோரிக்கை

மாமல்லன் நகர், கே.டி.எஸ்., மணி தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க, வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்;

Update: 2025-09-20 03:52 GMT
காஞ்சிபுரம் மாநகராட்சி, 19வது வார்டு, மாமல்லன் நகர், கே.டி.எஸ்,. மணி தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகளும், பாரத் ஸ்டேட் வங்கி, உணவகம், மளிகை கடை உள்ளிட்டவை இயங்கி வருகின்றன. இத்தெரு வழியாக சண்முகா நகர், மின் நகர், மாமல்லன் நகர், திருக்காலிமேடு உள்ளிட்ட பல் வேறு பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இச்சாலையில், மழைநீர் வெளியேற வடிகால்வாய் வசதி இல்லை. இதனால், காஞ்சிபுரத்தில் பெய்த மழையால், சாலையில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், அருகில் உள்ள அம்பேத்கர் நகர் செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், பாதசாரிகள், சகதியாக மாறியுள்ள மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதியில், சாலை சேதம் அடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள், பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். வேகமாக செல்லும் வாகனங்களால் மழைநீர் தெளிப்பதால், நடந்து செல்வோர் மனஉளைச் சலுக்கு ஆளாகின்றனர். எனவே, மாமல்லன் நகர், கே.டி.எஸ்., மணி தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க, வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News