பேருந்து படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்

பேருந்தில் கூட்டத்தை காரணம் காட்டி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடியே சேட்டையில் ஈடுபடுவது பயணியர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது;

Update: 2025-09-25 10:13 GMT
காஞ்சிபுரத்தில் இருந்து, வாலாஜாபாத் வழியாக தடம் எண் டி36; என்கிற அரசு பேருந்து, திருமுக்கூடல், மதுார், சித்தாலப்பாக்கம், சிறுமையிலுார் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக ஆனம்பாக்கம் வரை இயங்குகிறது. இக்கிராமங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் ஏராளமான மாணவர்கள் இப்பேருந்து மூலம் பயணித்து, வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கல்விக்கூடங்களுக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு பேருந்தில் பயணம் செய்யும்போது, மாணவர்கள் படியில் தொங்கி ஆபத்தான பயணம் செய்து வருகின்றனர். பேருந்தில் கூட்டத்தை காரணம் காட்டி மாணவர்கள் ஆபத்தை உணராமல் படியில் தொங்கியபடியே சேட்டையில் ஈடுபடுவது பயணியர் இடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியாவது: வாலாஜாபாதில் மாலை நேரத்தில் பள்ளி வகுப்பு முடிந்து, திருமுக்கூடல் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக இயங்கும், முதல் அரசு பேருந்தாக தடம் எண் டி:36 ஆனம்பாக்கம் உள்ளது. இதனால், இப்பேருந்தில் மாணவ - மாணவியர் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். எனினும், தேர்வு காலங்களில் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் காலையில் தேர்வு முடிந்து மதியம் சென்று விடுகின்றனர். அப்போது பேருந்துகளில் கூட்டம் குறைவாக இருந்தாலும் கூட பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். பேருந்து படியில் தொங்கியபடி, தலையை வெளியே நீட்டியும், கால்களை தரையில் படும்படியும் பயணிப்பதால் மற்றவர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. எனவே,திருமுக்கூடல் வழியான கிராமங்களுக்கு மாலை நேரத்தில் கூடுதலாக பேருந்து இயக்குவதோடு, அவ்வழி தடங்களில் போலீசார் கண்காணித்து, பேருந்து படியில் தொங்கியும், கூச்சலிட்டும் இடையூறு செய்யும் மாணவர்களை எச்சரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News