திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. பக்தர்கள் புனித நீராடி சஷ்டி விரதத்தை தொடங்கினர். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 27 ஆம்ங தேதி நடைபெறுகிறது;

Update: 2025-10-22 05:38 GMT
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு கந்த சஷ்டி விழா, ஆவணித் திருவிழா, மாசித்திருவிழா உள்பட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இதில் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த கந்த சஷ்டி விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதற்காக அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் அதைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடந்தது. கோவில் பிரகாரத்தில் உள்ள யாகசாலைக்கு காலை 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் எழுந்தருளினார். கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து வருகின்றனர். முன்னதாக அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி பச்சை உடை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கினர். ஆறு நாட்கள் நடைபெறும் இந்த கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் வருகின்ற 27 ஆம் தேதி கோவில் முன்புள்ள கடற்கரையில் நடைபெறுகிறது. இந்த சூரசம்காரத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News