தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

குமாரபாளையம் நகராட்சி பகுதியில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக சாலை அமைக்காமல் வாகனங்கள் திரும்பிச் சென்றன.;

Update: 2025-11-20 16:28 GMT
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட சுந்தரம் நகர் பகுதியில் நேற்று தார் சாலை அமைப்பதற்காக நகராட்சி அதிகாரிகள் வாகனங்களைக் கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் தார் சாலை நன்றாக தான் உள்ளது எதற்காக தார் சாலை அமைக்கிறீர்கள் ?என்று கேள்வி எழுப்பியதுடன், ஏற்கனவே தார் சாலை அமைக்கும் பொழுது சாலையை தோண்டாமல் மேலோட்டமாக சாலைகளை போட்டு செல்வதால் சாலையின் உயரம் அதிகரித்து வருகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகள் பள்ளமாக மாறிவிட்டன. சாலைகளில் செல்லும் மழைநீர் வீடுகளுக்கு புகுந்து பாதிக்கப்படுகின்றன. எனவே சாலை அமைக்கும் பணி செய்ய வேண்டுமானால் பழைய சாலைகளை தோண்டி தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து சாலை அமைக்கும் பணியை தடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறி வாகனங்களை திரும்ப எடுத்துச் சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தின் காரணமாக சாலை அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் கைவிட்டதால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News