அரசு பள்ளி மாணவர்கள் இருவர் விபத்தில் பலி
குமாரபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் இருவர் விபத்தில் பலியானார்கள்.;
குமாரபாளையம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர்கள் லாரி ஓட்டுனர் கார்த்திகேயன், ஜோதி தம்பதியர். இவர்களது மகன்கள் லிங்கேஸ்வரன், 13, நவனேஸ்வரன், 12, இவர்கள் இருவரும் குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் 7 மற்றும் 6ம் வகுப்பில் படித்து வருகின்றனர். அதே பகுதியை சேர்ந்த ஜானகியின் மகன் தாமரைசெல்வன், 25, லிங்கேஸ்வரன், 13, நவனேஸ்வரன், 12 ஆகிய மூவரும் ஒரு டி.வி.எஸ். 50 வாகனத்திலும், ஜோதி, ஜானகி இருவரும் மற்றொரு டி.வி.எஸ். வாகனத்திலும், தைப்பூச விளைவை காண நேற்றுமுன்தினம் இரவு 09:00 மணிக்கு சென்றனர். சங்ககிரி பைபாஸ் சாலையில் சின்னாக்கவுண்டனூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத லாரி மோதியதில், லிங்கேஸ்வரன், 13, நவனேஸ்வரன், 12 பலத்த அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார்கள். தாமரைசெல்வன் லேசானக காயத்துடன் உயிர் தப்பித்தார். ஜோதி, ஜானகி சென்ற வாகனமும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லேசான காயமடைந்தனர். இதுகுறித்து சங்ககிரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாணவர்களின் மறைவிற்கு பள்ளியின் சார்பில் அனுதாபம் தெரிவிக்கப்பட்டது.