நூலக வாசகர் வட்டத் தலைவருக்கு விருது வழங்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவருக்கு தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது.;
குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவருக்கு தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது வழங்கும் விழா நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருதிணை, குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விடியல் பிரகாஷ்க்கு வழங்கி பாராட்டினார், இந்திய நூலகத்தந்தை என போற்றப்படும் டாக்டர் அரங்கனாதன் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் சிறப்பாக சேவையாற்றும் கிளை நூலகர் மற்றும் வாசகர் வட்ட தலைவரை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள். அரசு நூலகத்தை மக்கள் நன்கு பயன்படுத்தும் வகையில் நூலக வளர்ச்சியை மேம்படுத்தி, நூலக விழிப்புணர்வை ஏற்படுத்தியதைப் போற்றும் வகையில் விருது வழங்கப்படுகிறது. மேலும் இவர் புத்தக கண்காட்சி நடத்துவது மற்றும் அரசு பள்ளி மாணவர்களை பேருந்து வைத்துக்கொண்டு புத்தக கண்காட்சிக்கு அழைத்துச் செல்வது மற்றும் 65 இடங்களில் வாசிப்பு இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார். விருது வழங்கும் பொழுது, மாவட்ட நூலக அலுவலர் தேன்மொழி ( பொ ) மற்றும் குமாரபாளையம் கிளை நூலகர் மாரியாயி உடன் இருந்தனர்.