திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு 1008 பால்குடம் ஊர்வலம்
தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு. சக்தி கரகத்திற்கு கோவில் குருக்கள் தீபாராதனை செய்து வரவேற்று வழிபாடு;
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஶ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் தை அமாவாசை அன்று பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இன்று தை அமாவாசையை முன்னிட்டு 18 ஆம் ஆண்டாக அபிராமி அம்மன் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, மஞ்சள் உடை உடுத்திய 1008 பக்தர்கள் ஆணைகுளக்கரையில் அமைந்துள்ள எதிர்காலேஸ்வரர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்து பிரமாண்ட ஊர்வலமாக மேள தாள வாத்தியங்கள் முழங்க கோவிலுக்கு வந்தனர். கோயில் வாசலில் கோயில் குருக்கள் சக்தி கரகத்திற்கு தீபாராதனை செய்து வரவேற்று வழிபாடு செய்தார். தொடர்ந்து பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கோயிலை சுற்றி வந்து அபிராமி அம்மன் சன்னதியில் பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.